மஞ்ஞும்மல் பாய்ஸ் - குடி தவிர வேறொன்றும் தரவில்லையா..!?

பொதுவாக வெற்றி அத்தனை எளிதில் வாய்த்துவிடுவதில்லை. பெரும்பாலும் அது நிகழ்த்தக் கோருவது யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடியாதவற்றைத்தான். நிகழ்த்த முடியாதவை எனப் பட்டியலிட்டதை யாரோ ஒருவர், எதன் நிமித்தமாகவோ நிகழ்த்திடும்போது அது எளிதாக வெற்றியென அங்கீகாரம் பெற்று விடுகின்றது. சில வெற்றிகள் அப்படி நிகழ்த்த முடியாதவற்றை நிகழ்த்துமாறு நிபந்தனைகள் விதிப்பதில்லை. மிக நுண்ணியதொரு அழகியலில், மாறுபட்ட பார்வையில் தன்னை திருப்தி செய்துகொள்ளும். அப்படியான அழகியலின் வாயிலாக எதிர்பாராத வெற்றியை ஈட்டிய படம்தான் மஞ்ஞும்மல் பாய்ஸ்.

எல்லோரும் கதை குறித்து எழுதிவிட்டதால் ஸ்பாய்லர் அலெர்ட் எதுவும் தேவைப்படாது. கொச்சி அருகே மஞ்ஞும்மல் என்கிற ஊரிலிருந்து இளைஞர் குழுமம் ஒன்று கொடைக்கானல் சுற்றுலா செல்கின்றனர். காலங்காலமாய் இளைஞர்கள் சுற்றுலா சென்றால் எப்படி நடந்துகொள்வார்களோ அப்படியானதொரு கொண்டாட்டத்தோடு சுற்றுலா அமைகின்றது. இறுதியாக ஊருக்குப் புறப்படும் முன் குணா குகைக்குச் செல்கின்றனர். வனத்துறையின் தடை மற்றும் எச்சரிக்கையை மீறி உள்ளே சென்று தங்கள் வருகையினைப் பதிவு செய்யும் வகையில் மஞ்ஞும்மல் பாய்ஸ் என்றெழுதி கொண்டாட்டமாக இருக்கும் சூழலில் குகைக்குள் ஒரு ஓட்டையின் வழியே சுபாஷ் விழுந்துவிட, சுபாஷை மீட்டெடுக்கும் போராட்டம்தான் கதை.

குடிகார இளைஞர்கள், பொறுப்பற்ற முறையில், தடுப்பு மற்றும் எச்சரிக்கையை மீறிச் சென்று விழுந்ததை இப்படி படமாக எடுத்துக் கொண்டாடலாமா எனும் தர்க்கவாதிகளிடமிருந்து நான் விலகி நிற்கவே விரும்புகிறேன்.

மஞ்ஞும்மல் பாய்ஸ் என்றழைக்கப்படும் உண்மையான பாத்திரங்கள் பெயிண்ட் அடிப்பவர்கள் மற்றும் மீன் வெட்டுகின்றவர்கள். பொதுவாக இளைஞர்களின் பெரும்பாலான மலைப்பிரதேச சுற்றுலாக்களில் மது இருப்பதுண்டு. சரி தப்பு என்பது அவரவர் எண்ணம். ஆனால் மது இருப்பது உண்மை.

 2006ம் ஆண்டு நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்தியத் திரைப்படங்களில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மலையாளத்தில் அதிகத் திரைப்படங்கள் வருவதுண்டு.




இதுவரை எத்தனையோ மலையாளப் படங்கள் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் வந்திருந்தாலும், மஞ்ஞும்மல் பாய்ஸ் அடைந்திருக்கும் வெற்றி மிக ஆச்சரியமானது. இத்தனைக்கும் இதைவிடச் சிறந்த, உண்மைச் சம்பவ திரைப்படங்கள் மலையாளத்தில் உண்டு. இந்தப் படத்தின் வெற்றிக்கு மலையாள ரசிகர்களைவிட தமிழ் ரசிகர்கள்தான் காரணம் என்றால் அது மிகையாகாது. உண்மையில் இப்படியொரு அலையை எதிர்பார்க்கவில்லை. மலையாளத் திரைப்படம் தமிழ்நாட்டில் ஏன் இப்படியொரு பேரலையை ஏற்படுத்தியது என்ற ஆச்சரியம்தான் மேலோங்கி இருந்தது.

தமிழ் ரசிகர்களிடம் ஏன் இத்தனை பரவசம் எனும் கேள்விக்கான பதில், இயக்குனரின் மிக சாமார்த்தியமான அந்த முடிவு. குட்டனும் சுபாஷும் கருவறையிலிருந்து மறு பிறப்புபோல் மேலெழும்பி வரும் கணத்தில் பளீரென குணா திரைப்படத்தின் கண்மணி அன்போடு பாடலிலிருந்துஉண்டான காயம் எங்கும் தன்னாலே மாறிப்போன மாயமென்ன பொன்மானே பொன்மானேஎன்றொலிக்கும் ஜானகியின் குரலுக்கு திரையரங்கம் துள்ளும் மாயமே சாட்சி. அந்தத் தருணத்தில் அந்த வரி ஒலிக்காமல் போயிருந்திருந்தால் தமிழ் ரசிகர்களிடம் இந்த மாயாஜாலத்தை நிகழ்த்தாமல் மற்றுமொரு மலையாளப் படமாகவே இருந்திருக்கலாம்.

படத்தின் இயக்குனர் சிதம்பரம் அளித்த பேட்டிகளினூடாக அறிவது, அந்தப் பாடல் எதேட்சையாக அந்த இடத்தில் நுழைக்கப்படவில்லைஎழுதியபோதே, கண்மணி அன்போடு பாடலில் துவங்கி, ரசிகர்களை தயார்படுத்தி வைத்திருந்து, முக்கியமான அந்தக் காட்சியில்உண்டான காயமெங்கும்வரியை பொருத்துவது என்று தீர்மானித்திருக்கின்றார்.

அழுத்தம் நிறைந்த அந்தக் கணத்தில் ஆனந்தக் கண்ணீர் வர வைக்கும் ஆற்றல் குறிப்பிட்ட அந்த வரிக்கும், குரலுக்கும், அதன் இசைக்கும் இருந்ததை திரையரங்கில் காண முடிந்தது. அதுதான் ஒரு படைப்பின் அழகியல். அது தான் நிகழ்த்த விரும்பியது மற்றும் பார்வையாளனிடம் கொண்டு வர விரும்பியதன் உச்சத்தைத் தொட்டுவிட வேண்டும்.

அந்தப் பாடல் சேர்க்கை படத்தின் வெற்றிக்கான காரணமாக பார்க்கும் அதே சமயம், அதைத் தாண்டி படத்தில் ஆழமாக ஒன்றிப்போக எனக்கு சில காட்சிகளும் காரணங்களும் உண்டு.

*

சுபாஷை மீட்பதற்காக குட்டன் குழிக்குள் இறங்குகையில் 120 அடி ஆழத்தில் கயிறு தீர்ந்துவிட காவல் அதிகாரி அடுத்த கயிற்றை இணைக்குமாறு தீயணைப்பு துறை அதிகாரியிடம் சொல்கிறார். அவர் இனியும் கீழே இறங்கினால்  ஆக்ஸிஜன் கிடைக்காது, எனவே குட்டனை மேலே வர வைப்பதுதான் நல்லது என்கிறார். மேலே வருமாறு குட்டனிடம் காவல் அதிகாரி சொல்கிறார். குட்டன் மறுக்க, அவரின் குரல் அதிகாரமாக ஆணையிடுகின்றது. பொதுவாகவே அதிகாரத்தின் குரல்களில் எப்போதும் அறிவின் வாசனை இருக்காது என்பதற்கான மிகச் சரியான உதாரணம்தான் உயிரைப் பணயம் வைத்து, துணிந்து இறங்கியவனிடம்மரியாதையா மேல வந்துடுஎனும் அந்த ஆணை.

 

*

குட்டன் சுபாஷைக் கண்டு, கயிற்றில் தன் உடலோடு இணைத்துக் கட்டிக்கொள்ள மேலிருந்து, கயிறு இழுக்கும் வீரர்களான நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இழுக்கின்றனர். மெல்ல மெல்ல சாவின் பிடியிலிருந்து விடுபட்டு வாழ்வை நோக்கி இருவரும் உயர்கின்றனர். ஒருகட்டத்தில் குறுகிய இடுக்கில் சிக்கிக்கொள்ள மேலே இழுக்க முடியாத நிலை வருகின்றது.

அனைவரும் ஏறத்தாழ நம்பிக்கை இழக்கும் கணத்தில், அதுவரை அதிர்ச்சியில், மிகுந்த மன அழுத்தத்தில் உறைந்துபோயிருந்த, அபிஷேக் குகைக்குள் வந்து நிற்கிறான். அவனைப் பார்த்தவர்கள் பதட்டத்தோடு அங்கிருந்து வெளியேறுமாறு கத்த, அதனைப் பொருட்படுத்தாது, ”எடா... லூசடிக்கடா!” எனும் தேர்ந்த யுக்தியை மந்திரம்போல் தருகிறான்.

மேலே இழுப்பதுதான் நோக்கம் என்பதற்காக ஒரே மூச்சில் இழுத்துவிட முடியாது. சிக்கிக்கொள்ளும் தருணங்களில் இன்னும் ஆற்றல் கொடுப்பதால் சிக்கல் தீர்ந்துவிடாது, தேவையான தருணங்களில் சற்று தளர்த்திக் கொண்டுதான் மீண்டும் முழு வலிமையோடு தொடர வேண்டும் என்பதை அந்தகயித்த கொஞ்சம் விட்டு இழு” (லூசடிக்கடா) மிக எளிதாக உணர்த்தி விடுகின்றது. ‘சற்றே தளர்த்தி முழு ஆற்றலைச் செலுத்துஎன்பது அந்தக் காட்சிக்கான யுக்தி மட்டுமல்ல, வாழ்க்கைப் பயணத்தின் பல தருணங்களுக்கான பாடம்.


*

ந்தப் படத்தில் ஒட்டுமொத்தமாகக் கொண்டாட என்னிடமிருருக்கும் மிக முக்கியக் காரணம், தேவையின் பொருட்டு வைக்கும், சொற்களில் விவரிக்கவியலாத அளவுக்கான அபரிமிதமான நம்பிக்கை. சாத்தானின் சமையலறை என்றழைக்கப்படும் குணா குகையின் ஆழம் யாருக்கும் தெரியாது. வரைபடம் கிடையாது. உள்ளே விழுந்தவர்கள் யாரும் அதுவரை உயிரோடு மீண்டதில்லை. சூசைட் பாய்ண்ட்-ல் தற்கொலை செய்தோரின் உடல்களை எடுத்துவரும் திறன் வாய்ந்தவர்கள்கூட குகையின் குழிக்குள் விழுந்தவர்களை மீட்டெடுத்துவர முன்வருவதில்லை.

இப்படியாக அந்தப் பகுதி கடைக்காரர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வனத்துறை, காவல் துறை மற்றும் மீட்பு படை உள்ளிட்ட அனைவரும் உயிரோடு மீட்க முடியாது என மிக உறுதியாகச் சொன்ன பிறகும், அந்த நண்பர்களை எது போராட வைத்தது என்பதுதான் என்னை இடைவிடாது ஆச்சரியமூட்டும் கேள்வி.

ஆழ்துளைக் குழாயில் விழுந்தோர், இடிபாடுகளில் சிக்கியோர், குழிக்குள் விழுந்தோர், சுரங்கத்தில் மாட்டியோர் என எத்தனையோ சூழல்களில் மீட்டெடுக்கப்படுவதில், ஏற்கனவே அப்படி மீட்டெடுத்தற்கான சில உதாரணங்கள் இருந்ததுண்டு. ஆனால் குணா குகைக்குள் விழுந்தவர் மீண்டதாக வரலாறு இல்லாதபோது, புதியதொரு வரலாற்றை உருவாக்க, அவர்களிடம் இருந்த அளவற்ற, அதுவரை யாரும் உணர்ந்திடாத நம்பிக்கையின் மூலம் என்னவாக இருந்திருக்கும்?

சுபாஷைக் கைவிட்டு ஊர் திரும்பினால், சுபாஷின் அம்மாவை எதிர்கொள்ளும்போது அவரின் எளிய கேள்விக்கும், குத்தும் பார்வைக்கும் சக எளிய மனிதர்களான அவர்களால் ஒருபோதும் பதில் தயாரித்துவிட முடியாது. அதைவிட மிக முக்கியமானது உடன் வந்த ஒருவனை ஆபத்தில் விட்டுவிட்டு, அவனுக்கு என்ன ஆனது, எப்படியிருக்கிறான் எனத் தெரியாமல், தெளிவில்லாதொரு முடிவினை தெளிவான தீர்வுபோன்று ஏற்றுக்கொள்ளும் வதைக்குள் அவர்கள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அதுதான் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் சுமத்திய அவநம்பிக்கைக்கு சவால் விடத் துணிகின்றது. அந்த சவால் ஓங்காரமாய் ஒலிக்கவில்லை. மௌனமாக உள்ளுக்குள் ஆற்றலாய் உருவெடுக்கின்றது. யாரோடும் முரண் கொள்ளாமல் தங்களை உருவேற்றிக்கொள்கின்றனர். என்னவாகினும் போராடிப் பார்த்துவிடுவது எனும் போர்க்குணம் எழுகின்றது.

அந்தப் போர்குணம் வௌவால்கள் படையெடுத்த ஆழ்ந்த இருளை நோக்கிடேய் சுபாஷுஎன கதறிக்கொண்டேயிருந்தது, காவல் துறை பழி சொல்லி அடித்து துவைத்தபோதும் பொறுத்துக்கொண்டது, மழை பொழிந்தபோது தன்னைக் கரையாகக் கட்டமைத்தது, மீட்டுப்படை வீரர் இறங்க மறுத்தபோது தம் உயிரை பணயம் வைத்தது, இறுதியாக நட்பின் பெயரால், மனிதத்தின் பெயரால், உறுதியின் பெயரால், நம்பிக்கையின் பெயரால் வென்றெடுத்தது.

~ ஈரோடு கதிர்


வெறுப்பென்பது வீரமோ, உரிமையோ அல்லது அடையாளமோ அல்ல

மேலோட்டமாகப் பார்த்தால் ‘ஒரே ஒரு வாழ்க்கைதான்’ என்பது பல தருணங்களில் கேட்டுச் சலிப்புற்ற, வெகு எளியதொரு வரிதான். ஆழ்ந்து யோசித்தால் செய்து கொண்டிருக்கும் எத்தனையோ செயல்களை மீளாய்வு செய்யவும், செய்யாமல் இன்னும் விட்டுவைத்திருக்கும் செயல்களை முடுக்கிவிடவும் மிகப் பெரும் ஆற்றல் கொண்ட உண்மை அது.


மனிதர்கள் தம் வாழ்க்கையை மிக அதிகமாக நேசிப்பது வெற்றியடையும் தருணங்களில் மட்டுமேயல்ல. எதன் நிமித்தமாகவோ வாழ்க்கை தன் கையை விட்டுப் போய்க்கொண்டிருக்கின்றது என்பதை உணரும் கொடுங்கணத்தில் வாழ்க்கையை இழக்க மறுக்கும் எண்ணம் வரும்போது, முதலில் பதட்டம் ஏற்படும். அந்தப் பதட்டம் அடங்கி உண்மை புரியும்போது, அதுவரையிலும் இல்லாததொரு நேசிப்பு அதன் மீது கூடும். என்ன செய்தாவது இதனை நான் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனும் வேட்கை அது. அந்தக் கணத்தில் நெகிழும் மனம் அதுவரையிலும் வாய்க்காத ஒன்று. அந்தத் தருணத்தின் வேட்கை தோய்ந்த நேசிப்புக்கு நிகரேதுமில்லை.

விவாதிப்பதற்கென்று சில நட்புகள் எனக்குண்டு. எங்கள் சந்திப்புகளில் உரையாடல் விவாதமாகச் செல்லும். அப்படியானதொரு விவாத தருணத்தில் நானும் நண்பரும் எதிரெதிர் புள்ளியில் நின்று பலவற்றைக் குறித்தும் உரையாடிக் கொண்டிருந்தோம். எதிரெதிர் புள்ளியில் நின்று விவாதிப்பதன் மூலம் பல கோணங்களை எட்ட முடியும் என்பதை அறிந்தவர்கள் நாங்கள். எங்களுக்குள் இருந்த ஆழமான புரிதலின் விளைவாக மட்டுமே அப்படியாதொரு உரையாடலை முன்னெடுக்க முடிகின்றது. தண்டவாளம் போல் இணையாமல் நீண்டு கொண்டிருந்த விவாதம் ஒருகட்டத்தில் அதன் நிறைவுப்புள்ளியினை எட்ட, தண்டவாளங்கள் இரண்டும் இணைந்தன. எதிரெதிர் வாதங்கள் வைக்க முடியாமல் இருவரும் ‘ஆமாமா... சரிதான்!’ என ஒப்புக்கொண்ட உண்மையின் பெயர் ‘வெறுப்பு’.

மனிதர்கள் எப்போதுமில்லாத அளவுக்கு ‘வெறுப்பினை’ உமிழத் தொடங்கியிருக்கின்றனர் எனும் புள்ளியில் இருவரும் எதிர்க்கருத்துகள் வைக்காமல் ஆழ்ந்த அமைதியில் நின்று ஒப்புதலாய் தலையசைத்துக் கொண்டோம். அந்த அமைதி மௌனம் கிடையாது. அலையலையாய் அவ்வப்போது வீசும் வெறுப்பின் வாசனையில் நனைந்திருந்த மௌனம்.

நட்பு, உறவு, அமைப்பு, அரசியல், சாதி, மதம், பொருளாதார மாறுபாடு என நீளும் பட்டியலில் சிலவற்றில் ஓரளவு, பலவற்றில் பெருமளவு வெறுப்பு, வேர் பாய்ச்சி கிளை பரப்பியிருப்பது எல்லோருக்குமே காணக்கிடைக்கின்றது. இந்த வெறுப்பின் அடிப்படையில் அவரவர் மனப்பாங்கு ஒருபக்கம் என்றால், மற்றவர்கள் மெல்ல நஞ்சாக ஊற்றுவது மறுபக்கம்.




மனப்பாங்கு என்பதுவும்கூட ஒவ்வொருவரும் காலப்போக்கில் கட்டமைப்பதுதான். தனக்குக் கிடைக்காதவொன்று இன்னொருவருக்குக் கிடைக்கும்போது ஏற்படும் போட்டி, இயலாமை, ஆற்றாமை மிகச் சரியாகக் கையாளப்படவில்லையென்றால், அது அந்த இன்னொருவர் மீது அல்லது அது தொடர்பான யாவற்றின் மீதும் வெறுப்பை விதைக்க ஆரம்பித்துவிடும். வெறுப்பின் வேர்களுக்கும், கிளைகளுக்கும் வேகமும் தாகமும் அதிகம்.

இசைக்கு, ஏதோவொன்றின் எழிலுக்கு, வாசனைக்கு, நெகிழ்த்தும் சொல்லுக்கு மயங்காதோர் உண்டா?. எதுவெல்லாம் பிடித்ததாக மனம் ஏற்றுக்கொண்டு மூளையில் பதிவாகின்றதோ, அவற்றையெல்லாம் நிபந்தனைகளின்றி ஏற்றுக்கொண்டு அதன் வசியத்தில் கிறங்கிப் போவதென்பது உயிரிகளுக்கேயுரிய எளியதொரு அம்சம்தான்.

கட்டமைக்கப்படும் பிம்பமாகினினும், அவதூறாகினும் எளிதில் வசப்பட்டுவிடுவார்கள். தனக்கு நேசிக்க ஒன்று கிடைத்தால், அத்தோடு நிற்கவியலாது. தான் நேசிக்கும் ஒன்றின் எதிர்நிலையில் உள்ளதன் மீது வெறுப்புக் கணைகளை வீசுவதையும் தம் நேசிப்பின் அங்கமெனக் கருதுவதுண்டு.

யாரோ அல்லது எதுவோ ஊட்டிய வசியத்தில் சிக்கி இடைவிடாது, இதுஅதுவென எந்த வரைமுறைகளுமற்று தன்னைச் சுற்றிலும் இருக்கும் எல்லாவற்றின் மீதும் வெறுப்பை உமிழ்கின்றவர்களை நீங்களும் கண்டிருக்கலாம். எல்லாவற்றிலும் ‘இதுவென்றால் இப்படித்தான் இருக்கும், அதுவென்றால் அப்படித்தான் இருக்கும்’ என்பதாக முன்முடிவோடு அணுகி, அதன் மீது வெறுப்பினை பாய்ச்சி அதிலொரு அதீத போதை உணர்வதை நிறையக் காணலாம்.

மனப்பாங்கு சரியாக அமையாமல் போவதற்கு தன்னைக் குறித்த ‘தாம் யார் எனும் சுய உணர்தல்’ இல்லாததுவும் மிக முக்கியமான காரணம். தன்னைக்குறித்த சுய உணர்தலற்றவர்கள் இந்த வசியத்தில் எளிதாக தம் வசம் இழப்பார்கள். தம் வசம் இழந்து பிறிதொன்றின் வசம் சென்றால், அது ஆட்டுவிக்கும். இதுதான் நான் என தன்னை வரையறை செய்துகொள்வதன் மூலமாக அந்த வெறுப்புணர்வு சுரக்கத் தொடங்கும்போது, வரையறைக்கு உகந்ததுதானா இதுவெனக் கேள்வியெழுந்தால் வெறுப்பின் வேர்களில் வெந்நீர் பாய்ச்சிவிட முடியும்.

வெறுப்பின் நிழல் பிறரை மட்டுமே தீண்டுவதாகத் திருப்தியடைவோர் புரிந்து கொள்ளாத கசப்பான உண்மை, அதன் வேர்கள் தம் ஆன்மாவில் நீண்டு உயிர் பருகுவதை. வெறுப்பின் தன்மையை தாம் ஒருபோதும் அனுபவிக்காமல் எவரொருவருக்கும் வழங்கிவிட இயலாது. எப்பொழுதெல்லாம் வெறுப்பு வெளியேறித் தீண்டுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அது உள்ளே கசிந்து, பரவத்தான் செய்யும். அந்தப் பரவலில் மடிந்துபோன நேசத்தின் வேர்களை அறியாதது மிகப் பெரிய விந்தையல்ல. நேசத்தின் வேர்கள் மடிந்துபோகும்போதெல்லாம் மனம் என்னவாகும்? சிதைவைத்தான் சந்திக்கும். மெல்ல மெல்ல மனம் சுருங்கும், இறுகும், கருகும். ஒருகட்டத்தில் அது நோய்மையுறும்.

பலரும் என்னிடம் பேசுவதுண்டு, நானும் கேட்பதுண்டு. சிலவற்றை ஏற்றுக்கொள்ளவதில் பெரும் சவால் உண்டு எனக்கு. குறிப்பாக ஒரே கூரையின் கீழ் மிகப் பெரும்பாலான பொழுது வாழும் தம்பதிகள் ’நாங்கள் பேசிக்கொள்வதில்லை’ எனச் சொல்வதை மனச் சமநிலையோடு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.

மனிதர்களற்று மனிதர்களால் வாழ்ந்துவிட முடியாது. அதன் நிமித்தமாக எங்கெங்கோ மனிதர்களைத் தேடிக்கொண்டேதான் இருக்கின்றோம். நான்கு சுவற்றுக்குள் உடனிருப்போரிடம் உரையாடலுக்கு இடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்க மறுக்கின்றனர். பேச்சை விடுங்கள், பார்வைப் பரிமாற்றங்கள்கூட இல்லாமல் காலத்தை நகர்த்துவதற்கு அவர்கள் சொல்லும் சமாதானங்கள் வெற்றுச் சொற்கள் மட்டுமே.

என் நண்பரின் நண்பரொருவர் தம் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கொடுங்காலத்தில் இருக்கின்றார். ஒருபக்கம் நம்பிக்கையோடு போராடினாலும், மறுபக்கம் மரணம் எனும் உண்மையை தான் தவிர்க்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள மனதளவில் தம்மை தயார்படுத்திக் கொண்டுவிட்டார்.

அந்த நண்பரின் உரையாடல்கள் சில அவ்வப்போது என்னிடம் பகிரப்படுவதுண்டு. அவர் குறித்த பழைய பிம்பங்கள் நிறைய உண்டு. அது அவரின் காலமாக இருந்த அத்தியாயங்களில் நிகழ்ந்தவை. இது அவருடைய காலம் அல்ல. இறுதி அத்தியாயத்தின் கடைசிச் சொல் எதுவென்று கண்ணாமூச்சி ஆடும் மனிதனிடம் பழைய பிம்பங்களின் எச்சம்கூட இல்லை. பகிரப்பட்ட உரையாடல்களில் ஆழ்ந்து ஆழ்ந்து வாசித்ததில் நான் கண்டடைந்தது, அவர் வெறுப்புணர்வின் கூறுகள் அனைத்தையும் முற்றிலுமாகக் கைவிட்டிருப்பதை உணர முடிகின்றது. ஒருவேளை அவர் நலமோடு இயல்பான வாழ்க்கையில் இருந்திருந்தால், இந்த மனநிலை வாய்த்திருக்குமா என்றும் யோசிக்காமல் இல்லை.

கிடைத்திருக்கும் ஒரே ஒரு வாழ்க்கையில் எத்தனையோ நிறைவேறாமல்தான் போகின்றன. அதற்கான முக்கியக் காரணம் ஏதோவொரு போதாமை. அது நேரமாகவோ, மனமாகவோ அல்லது அறியாமையாகவோ இருக்கலாம். இத்தனை போதாமைகள் இருக்கும்போது, வெறுப்பிற்காக எப்படி நம்மால் தனித்து நேரமும், மனமும், ஆற்றலும் ஒதுக்க முடிகின்றது. நாம் அப்படியாகவே வழிவழியாகப் பழக்கப்படுத்தப்பட்டு விட்டோமா?

வெறுப்பு என்பது வேறொன்றுமில்லை. அதுவும் ஓர் உணர்வுதான். இந்த உணர்வு வேண்டுமா, வேண்டாமா எனும் தெளிவு வந்துவிட்டால் போதும். முயற்சித்தால் மெல்ல மெல்ல கட்டுக்குள் வைக்கும் உணர்வுதான். ஆனால் முயற்சிக்கும் முடிவுதான் இதில் மிகப் பெரிய சவால். இதை முன்னெடுக்க ‘தான் யார்!’ எனும் சுய அடையாளம் அறிந்திருப்பது மிகப் பெரிய அளவில் உதவும். ’தாம் வெறுப்பு உணர்வற்றவர்’ எனும் சுய நிலைப்பாடு வெறுப்பின் திசை நோக்கி வேர் நுனி பயணிக்க முற்படும்போதெல்லாம் டேக் டைவர்சன் என மாற்றுப்பாதைக்கு வழி காட்டும்..

எல்லாவற்றையும் அதனதன் இயல்பில் புரிந்துகொள்தல், மனிதர்கள் அப்படியும்தான் இருப்பார்களென ஏற்றுக்கொள்தல், வெறுப்பால் எதையும் எட்ட முடியாது எதும் தெளிவு, தாம் விடுபடும் பொருட்டு இன்னொருவரை மன்னித்தல் என்பதுள்ளிட்டவைகளாலும் வெறுப்பு மனநிலைகளிலிருந்து மெல்ல விடுபட முடியும்

வெறுப்பென்பது ஒருபோதும் வீரமோ, உரிமையோ அல்லது அடையாளமோ அல்ல, அது அவரவரை சுயமாக மாய்க்கும் பெரும் பிணி.

- ஈரோடு கதிர்